ஞாயிறு, 31 ஜனவரி, 2021
அந்நாளை நினைக்கையிலே (14) பக்தனா என்று மட்டுமே பார்க்கின்ற பரமன் !
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
அந்நாளை நினைக்கையிலே (13) திரைச்சி மீனின் வால் சண்டைகளில் ஆயுதமாகப் பயன்படும் !
அந்நாளை நினைக்கையிலே (12) நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா !
அந்நாளை நினைக்கையிலே (11) பிறந்த நாளும் பாயசமும் !
அந்நாளை நினைக்கையிலே (10) பேயன் பழம்-புட்டு, சீனி கூட்டணியே வெற்றிக் கூட்டணி !
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்.
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்,
I.T.I.முகநூற் குழுமம்.
[10-11-2020]
----------------------------------------------------------------------------------
அந்நாளை நினைக்கையிலே (09) மாங்கனியும் கம்பளிப் பூச்சி நச்சரிப்பும் !
அந்நாளை நினைக்கையிலே (08) தீப்பெட்டி விடு தூது !
எங்கள் தெருவில் வசித்து வந்த ராமன் அண்ணனிடம் ஒப்படைக்கும் பொருட்டு வாரமொரு முறை தீப்பெட்டியொன்றை அக்கா ஒருவர் என்னிடம் தருவார் !
புகை பிடிக்கும்
பழக்கம் கொண்ட அவரிடம் அக்கா தந்த தீப்பெட்டியைத் தவறாமல் ஒப்படைப்பது எனது பணி.
அதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பகுத்தறிவேதும் சிறுவனான எனக்கில்லை. ஒரு நாள்
மாலை தோழர்களோடு நான் விளையாடிக் கொண்டிருக்கும் வேளை அக்காவின் அவசர அழைப்பு வரவே
அங்கு சென்று தீப்பெட்டியைப் பெற்று ராமண்ணனிடம் ஒப்படைத்து விட்டு தாமதமாக
விளையாட்டில் வந்திணைந்தேன் !
தாமதத்திற்கான காரணத்தை
எனது நண்பர்கள் வினவிய போது ராமண்ணனுக்கு வாரமொரு முறை அக்கா செய்கின்ற தீப்பெட்டி
உபயத்தைக் குறித்து கூறினேன். "தீப்பெட்டியைக் குலுக்கிப் பார்த்தாயா ? திறந்தாவது
பார்த்தாயா ? எனக் கேள்விகளை அடுக்கினான் சசி. !
"இல்லை" என்ற
எனது பதிலைக் கேட்டு , தீப்பெட்டி தொழிற்சாலையேதும் அக்கா வீட்டில்
இருப்பதாக தெரியவில்லையெனவும் தீப்பெட்டிக்குள் காதல் கடிதமாகத் தான் இருக்க
வேண்டும் எனக் கணித்தான் நண்பன் ராஜு. அடுத்த தடவை தீப்பெட்டியை ஆய்வின் பொருட்டு
தங்களிடம் ஒப்படைக்கச் சொன்னான் சசி !
அடுத்த வாரம் அக்கா
அளித்த தீப்பெட்டியைத் திறந்து நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த காதல்
கடிதத்தை ஆவலுடன் எனது நண்பர்கள் படிக்கத் தொடங்கினர். ஐந்தாம் வகுப்புடன் தனது
உயர் படிப்பை இடை நிறுத்தம் செய்த அக்கா அன்புள்ள 'அத்தானுக்கு " என்று
துவங்குவதற்குப் பதிலாக "எத்தனுக்கு" என்று மடலை சரியாகவே
தொடங்கியிருந்தார். விளையாட்டை நிறுத்தி விட்டு கடிதத்திலுள்ள அபத்தங்கள்
அனைத்தையும் பேனாவால் சரி செய்ய ஒரு மணி நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது !
காதல் கடிதமாயினும்
தமிழுக்கு இழுக்கு நேர்ந்து விடக்கூடாதென்ற அக்கரையில் இலக்கியத் தொண்டு செய்து, திருத்தங்கள்
பல கொண்ட மடலை மீண்டும் தீப்பெட்டிக்குள் திணித்து ராமண்ணனிடம் பத்திரமாகப் கொண்டு
சென்று சேர்த்தோம். அத்துடன் அக்காவின் "தீப்பெட்டி விடு தூது" முடிவுக்கு
வந்தது !
திண்ணையில் அமர்ந்து கொண்டு பல்குத்திக் கொண்டிருக்கும் நடுத்தர வயதினரான மாமா ஒருவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவரது வீட்டைக் கடந்து செல்லும் தருணங்களில் அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது வழக்கம். சுசீந்திரம் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு தமிழ்ப் புலமை உண்டென்ற விவரம் பெரும்பாலானோருக்கு தெரியாது !
கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளையைப் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் இலக்கிய நயத்துடன் பேசுகின்ற
அவர் ஒன்பதாம் வகுப்பில் இடை நின்றவர் என்று கற்பனை கூடச் செய்யவியலாது.
அவரது தமிழ் ஆர்வம்
முறையாக ஊக்குவிக்கப் படாத தன் காரணமாக தலை சிறந்த தமிழ் சிந்தனையாளர் ஒருவரை இழந்து
விட்டதாக பலமுறை நினைத்ததுண்டு !
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும் கவலை கொள்ளாது வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தைரியமாக
நேரிட வேண்டுமென்பது அவரது சித்தாந்தம். வரவிருக்கும் பிரச்சினைகளை எங்ஙனம் எதிர்
கொள்வதென்ற கவலையில் இன்றைய இன்பத்தை சுவைக்க மறப்பது எவ்விதத்தில் நியாயமென்ற
அவரது தர்க்க வாதம் எனக்கு மிகவும் ஏற்புடையது. படிப்பை இடை நிறுத்தம்
செய்தமைக்கான காரணத்தை வினவிய போது ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு ஆசிரியரிடம்
சமர்ப்பித்த தனது நாலடி தமிழ்க்கவிதையே படிப்பை இடை நிறுத்தம் செய்வதற்கான காரணமாக
என்னிடம் விவரித்தார் !
கணக்குப் பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள் பெற்றமைக்காக பிற மாணவர்களின் முன்னிலையில் தனது உருவத்தை
வைத்து கிண்டல் செய்தது மட்டுமன்றி பிரம்பால் அடித்ததும் மாமாவுக்கு கடுமையான
அவமானத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது !
கணக்குப் பாடத்தை
பாடத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் மீது மாமாவுக்கு அடங்காத கோபம். கணக்கு ஆசிரியரைக்
குறித்த தனது ஆதங்கத்தை அழகுத் தமிழில் கவிதை வடித்து மறுநாள் ஆசிரியர்
வகுப்புக்கு வரும்போது அவரது கவனத்தைக் கவரும் வண்ணம் மேஜை மேல் வைத்தார் !
கவிதையைப் படித்ததும்
ருத்ரனாக மாறிய ஆசிரியர் படைப்பாளியை இனம் கண்டு பிரம்பாலடித்தார். மாமாவுக்கு
மட்டும் மானம்,சூடு, சொரணை இல்லையா என்ன ? வாட்டசாட்டமான
அவர் ஆசிரியர் கையிலிருந்த பிரம்பைப் வெடுக்கேனப் பறித்து இரண்டு பிரம்படிகளை
கணக்கு ஆசிரியருக்கு கணக்காகக் கொடுத்துவிட்டு புத்தகப் பையைத் எடுத்துக்கொண்டு
ஒரு மத்தியான நேரம் வயல் வெளியில் நடந்து வீட்டுக்குத் திரும்பி விட்டார் !
இந்நிகழ்ச்சிக்குப்
பிறகு மழைக்குக் கூட அந்தப் பக்கம் எட்டி பார்க்கவில்லை . மனிதனுக்கு சுய கௌரவம்
படிப்பை விட முக்கியம் அல்லவா ? அவர் இயற்றிய அழகுத் தமிழ் கவிதை இதோ !
..................…...............................
" நெடுமால்
திரு மருக !
நித்தம் நித்தம் இந்தெழவா
!
வாத்தியார் சாவாரா !
வயத்தெரிச்சல்
தீராதா"
..............................................
கணக்கு ஆசிரியரிடம்
கைத்துப்பாக்கி இல்லாதது பாக்கியம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டதை மாமாவிடம்
சொல்லவில்லை
!
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்,
[sethumaathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்.
[05-12-2020}
-------------------------------------------------------------------------------------
அந்நாளை நினைக்கையிலே (07) நரியின் கண் கோழிக்கூடு மேலே தாம்மா தங்கச்சி !
மளிகைப் பொருட்கள் வாங்கும் பொருட்டு கடைக்குச் செல்ல மிதி வண்டி டயர் எங்களுக்கு அத்தியாவசியத் தேவையாதலால் சைக்கிள் கடை முஸ்தபா அண்ணாச்சியிடமிருந்து வாங்கி வருவோம். பால் வாங்கச் செல்லும் போதும் டயரை கம்பால் தட்டிய படியே தூக்கு வாளியில் வாங்கி வருகின்ற அரை லிட்டர் பாலை முந்நூறு மில்லியாக்கி அம்மா கையில் பத்திரமாக ஒப்படைப்பது வழக்கம் !
சீக்காமடத்தெரு பத்மனாபன்
வீட்டில் சென்று பால் வாங்கி வருவதற்கு என்னுடன் என் தம்பியும் மதுவும் துணையாக
வருவார்கள்.எங்கள் பாட்டி வீட்டு வாசலின் முன்னால் மாலை நேரத்தில் ஒரு டயரும் அதன்
மேல் சிறிய குச்சியொன்றும் சுவரோடு சாய்த்து வைக்கப் பட்டிருப்பின், எனது
தம்பி வீட்டின் உள்ளே இருக்கிறார் என்று பொருள் !
இடுப்பில் கட்டியிருக்கும் கால்சட்டை பாதி வழியில் அவிழ்ந்து விடாமல் ஒரு கையால் மானம் காத்து சாமான்கள் அடங்கிய பையைத் தோளில் தொங்கப் போட்டு டயரை மறு கையால் ஓட்டிச் செல்லும் சிறுவர்களுக்கு ஒரு சர்க்கஸ் காரனின் சாதுர்யம் அவசியம். நானும் தம்பியும் வார் வைத்த கால்சட்டை அணிந்திருப்பதால் வழியில் அவிழ்ந்து விடுமோவென அச்சம் எங்களுக்கில்லை !
வீட்டில் ஒரு டயர் மட்டுமே இருந்த காரணத்தால் தம்பி அதனை எடுத்துச் செல்லும் வேளைகளில் கைகளாலேயே கற்பனையாக ஸ்டீயரிங் பிடித்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாயாலேயே ஊர்தியை இயக்கி சிறிய சந்து வழியாக நான் வேகமாக ஓட்டிச் செல்வேன் !
சந்துக்குள் இரண்டு கார்கள் எதிரும் புதிருமாக செல்லும். திருப்பங்களில் செல்லும்போது கீ..... கீ...... என சத்தமிட்டு லாகவமாக ஸ்டியரிங்கைப் ஒடித்து திருப்பி வேகத்தைக் குறைத்து கியரை மாற்றி நான் கடைக்கு செல்கின்ற வழியில் என் போன்று எரிபொருள் சேமிப்பு ஊர்திகள் பல எதிரில் வேகமாகச் செல்வதுண்டு !
சனி ஞாயிறு நாட்களில் வாடகை மிதிவண்டியில் பயிற்சி எடுப்போம். தெற்குத் தெரு ஜெகதீசனின் அண்ணன் கடையில் நியாயமான வாடகைக்கு மிதி வண்டிகள் கிடைக்கும். பெருமாள் பிள்ளை அண்ணன் தான் எங்கள் அனைவருக்கும் ஆஸ்தான குரு. மிதிவண்டி ஓட்டும் போது முதுகு சற்று வளைந்தால் கூட பலமாக அடித்து விடுவார். அடிக்குப் பயந்து நாங்கள் கவனமாக ஓட்டுவோம். மிதிவண்டிப் பயிற்சியின் ஆரம்பக் கட்டங்களில் எங்கள் தெருக் கோடியில் ஒருவர் நடந்து வந்தாலும் பிரேக்கை அழுத்தி விடுவோம் !
சிறிய மிதிவண்டி கிடைக்காத சந்தர்ப்பங்களில் பெரிய மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து இடைக்கால் போட்டு ஓட்டுவோம். பெருமாள் பிள்ளை அண்ணனிடம் பயிற்சி பெற்ற சசியும் கணேசனும் ராஜுவும் முதுகை வளைத்து மிதிவண்டி ஓட்டுகின்ற சிறுவர்களுக்கு பெருமாள் பிள்ளை அண்ணனிடம் தாங்கள் பெற்ற பரிசை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பார்கள் !
அக்காலத்தில் மிக அபூர்வமாக வயதான ஓரிருவருக்கு மட்டுமே நீரிழிவு நோய் காணப்படும். இந்நோய் உள்ள தாத்தா ஒருவர் புகழ் பெற்ற மருத்துவர்களான தனது மகன் மற்றும் மருமகளிடமிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவரல்லாத தனது மகள் வீட்டில் வசித்து வந்தார் !
மருந்து மாத்திரைகளை விட தாத்தாவுக்கு அத்தியாவசியத் தேவையான கருப்பட்டி, கல்கோனா ,தேன் மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரகசிய வினியோகம் செய்கின்ற சிறார்கள் சிலர் தாங்களும் அதன் மூலம் பயன்பெற்றனர். பலத்த உணவு கட்டுப்பாடுகளுக் கிடையிலும் தாத்தாக்களுக்கு சர்க்கரை அளவு குறையாது பாதுகாத்து இறைவனடி சேர்த்த பெருமை எங்கள் தெரு சிறார்களையே சாரும் !
"ஒன் நாட் நயன் " என்று ஒரு அண்ணாச்சி எங்கள் தெருவில் வசித்து வந்தார். சாதாரண நிலையில் பரம சாதுவாகக் காட்சியளிக்கின்ற இம்மனிதர் அவரைவிட உயரமும் பருமனுமான மனைவியை சாதாரண கதியில் எதிர்த்துப் பேசாதவர். வெத்திலை பாக்கு, மிட்டாய் வகைகள், சிகரெட் ,பீடி ,பழம், போன்ற பொருட்களுடன் கூடிய சிறிய பெட்டிக் கடை ஒன்றை தனது வீட்டுடன் இணைந்தே நடத்தி வந்தார். !
நன்கு அறிமுகமானவர் களிடம் மட்டுமே சிறு புன்முறுவலுடன் அளவாக நகைச்சுவையாகப் பேசுவார் அண்ணாச்சி. மாதமொரு முறை தெங்கம்புதூர் சென்று உற்சாக பானம் அருந்தி விரிவடைந்த நிலையில் வருகின்ற சந்தர்ப்பங்களில் அன்றைய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக மாற்றி விடுவார் !
தனது வீட்டின் முன் அஷ்ட கோணலாக நெளிந்து நின்று தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டி வலது கையால் தொடையைத் தட்டியவாறே "ஒன் நாட் நயன்" (இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109) தெரியுமாடி உனக்கு ? அடுப்பாங்கரையில் இருக்கும் உனக்கு என்ன தெரியும் ?" என மனைவியிடம் துணிச்சலாகக் கேட்டு விட்ட உலகின் முதல் கணவனாக எங்களைப் பெருமையுடன் பார்த்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரனைப் போல மந்தகாசப் புன்னகை புரிவார் !
" வாங்க மொதல்ல. எதுவானாலும் உள்ளே வந்து பேசிக்கலாம் " என அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்ற மனைவியிடம் "கதவ சாத்திட்டு என்னைச் சாத்திடலாம்னு பாக்கிறியா ? நடக்காது. நடக்கவே நடக்காது மவளே! ஒன் நாட் நயனில் புக் பண்ணிருவேன் " என்று மீண்டும் கூறி விட்டு சற்றே பின் வாங்குவார் !
வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி "காந்தி எனக்கும் சேர்த்து தான் சுதந்திரம் வாங்கித் தந்திருக்காரு. ஒருத்தனும் என்ன கேள்வி கேட்க முடியாது. பிரச்சினை எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தான். நீங்க உங்க வேலையை பாருங்க" என்று கூறி தனது விசிறிகளை விரட்டி விடுவார் ! நீண்ட நேரம் தெருவில் ஒற்றைக்காலில் நின்று அலுத்த பின் தனது வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு பழைய டி.எம்.எஸ் பாடல்களை இராகத்துடன் பாடுவார் !
"வரும் போது என்ன கொண்டு வந்தோம். போகும்போது என்னத்த கொண்டு போறோம் அன்பு சகோதரிகளே ! உங்களுக்கு ஓர் அறிவிப்பு. அதிரடி விற்பனையாக இன்று நமது கடையில் ஏத்தன் பழம் ஒன்றின் விலை பத்தே பத்து பைசா. ஓடி வாங்க" என்பார் !
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த எங்கள் தெருப் பெண்கள் சிலர் ஐம்பது பைசா எடுத்து வந்து ஐந்து ஏத்தன் பழங்களை சொந்தமாக்கி விடலாமென்ற பேராசையில் ஓடிச் செல்வர். ஆனால் உச்சக்கட்டப் போதையிலும் "செத்தாலும் நரியின் கண் கோழிக்கூடு மேலே தாம்மா தங்கச்சி ! நான் என்ன இளிச்சவாயனா ? ஐம்பது காசுக்கு ஐந்து தருவதற்கு. இந்தா பிடி ரெண்டு " என்று கூறி பழத்தை எடுக்காமலேயே காசுக்காக கையை நீட்டுவார் அண்ணாச்சி !
போதையிலும் விவரமாக
பேசுகின்ற அவரிடம் "ஒம்ம பழத்தை நீரே வெச்சுக்கிடும்" என்று
எரிச்சலுடன் திரும்புகின்ற பெண்களைப் பார்த்து "போனால் போகட்டும் போடா"
என்று இராகத்துடன் பாடுவார் அண்ணாச்சி !
பார்வையாளர்கள் கூட்டம் சற்று குறைந்ததுமே அண்ணாச்சியின் வீட்டுக் கதவுகள் திருவரங்க நாதனின் சொர்க்க வாசலைப் போன்று திடீரென்று திறக்கப்பட. அக்காவும் அவரது மகளும் சரசரவென்று அண்ணாச்சியை மின்னல் வேகத்தில் வீட்டின் உள்ளே இழுத்து கதவை அடைத்து விடுவர். பலத்த சப்தங்களுக்கிடையே குளிர்ந்த நீரால் அண்ணாச்சியை அபிஷேகம் செய்து அடித்துக் காயப் போட்டு விடுவார்கள் !
நெற்றியில் நீறு பூசி அமைதியே வடிவாக சிவப்பழமாக பெட்டிக் கடையில் மறுநாள் அமர்ந்திருக்கும் அண்ணாச்சி ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மெல்ல "ஒன் நாட் நயன்" என மீண்டும் தவங்கி விடுவார். தனது இல்லத்தரசியை எதிர்த்துப் பேசத் துணிவில்லாத அண்ணாச்சி அவரைத் திட்டுவதற்கான மனோதத்துவ ரீதியிலான ஒரு வடிகாலாகவே உற்சாக பானத்தைப் பயன்படுத்தினார் என்று அனுபவசாலிகள் பேசிக் கொண்டார்கள் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்,
[sethumathavam2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I.முகநூற் குழுமம்.
{02-12-2020}
-------------------------------------------------------------------------------------
அந்நாளை நினைக்கையிலே (06) எங்கள் வீட்டுக் கோழி !
எங்கள் வீட்டுக் கோழி அடைகாத்த குஞ்சுகள் பொரித்தவுடனேயை எங்கள் மூவருக்குமாக பெட்டைக் கோழிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றை பராமரிப்பதற்கான பொறுப்பும் வழங்கப்படும் !
மணிகண்டன் என்ற சேவல் மூவருக்கும் பொதுவானது. அறுவடை முடிந்து தெருவில் வைக்கோல் காயப்போடும் போது உதிர்கின்ற நெல்மணிகள் கோழிகளுக்கு சிறந்த உணவாதலால் விடுமுறை நாட்களில் போட்டியிட்டு எங்கள் கோழிகளை தெருவில் மேய விடுவோம் !
வசந்தி ,கஸ்தூரி போன்ற அழகிய பெயர்களை நானும் எனது அக்காவும் கோழிகளுக்கு சூட்டும் போது எனது தம்பி மட்டும் “குளாய்ங் “என்று அவனது கோழி எழுப்புகின்ற வித்தியாசமான ஒலியை வைத்துப் பெயரிட்டான். அவனைப் போலவே சேட்டைக்காரியாக அக் கோழியை வளர்த்தான் !
தம்பி அழைத்தால் மட்டுமே மடியில் ஓடி வந்து அமர்கின்ற அக்கோழி நாங்கள் அருகே சென்றால் கொத்தித் துரத்தி விடும். தான் முட்டையிட்ட விஷயத்தை குரலெழுப்பி தெரிவிக்கும் "குளாய்ங்" தனது பொன் முட்டையைத் தொடுவதற்கு என் தம்பியை மட்டுமே அனுமதிக்கும் !
விடுமுறைக் காலத்தில்
நானும் (குஞ்சான்) முருகனும் தோப்புக்குச் சென்று கறையான் புற்றைக் கம்பால்
தட்டிக் கண்டறிந்து உடைத்து பாம்புகளேதும் புற்றில் குடியிருக்க வில்லையென உறுதி
செய்த பின்னர்,
கரையானை கைகளால் அள்ளி டப்பாவில் நிறைத்து கோழிக்கு உணவாகக்
கொடுப்போம் !
ஒரு முறை பள்ளிக்குச் செல்லும் வழியில் வயல் வரப்பினருகிலுள்ள எலி வளை ஒன்றை உடைத்த போது இரு மரைக்கால் அளவு பதரேதுமில்லாத சுத்தமான நெல் மணிகள் எனக்கும் (குஞ்சான்) முருகனுக்கும் கிடைத்தது. எலிகள் தங்கள் வளைகளை சுரங்கத்தைப் போன்று கச்சிதமாக வடிவமைத்து நெல் மணிகளை சேமித்து வைத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டியது !
முட்டையிடும் நேரத்தை கால்நடை மருத்துவரைப் போன்று சுண்டு விரலால் பின் பக்கப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கூண்டில் கோழியை அடைத்து விடுவோம். முட்டையின் இருப்பு சற்று உட்பக்கமாக அமைந்திருந்தால் முட்டையிடும் நேரத்தை அனுமானித்து பிற்பகல் ஒரு மணிக்கு மேல் சாவதானமாகக் கூட்டிலடைப்போம் !
அறுவடைக் காலங்களில் சுமார் பதினைந்து முட்டைகள் வரை போட்டு அலுத்த பின்னர் கோழியின் மெருகேறிய சிவப்பு வண்ண முகம் வெளிறத் துவங்கி அடை கிடக்க ஆரம்பித்து விடும். அனுமதித்த இரு வார காலத்திற்குள் அடை தெளியா விடின் தண்ணீரால் தொடர் அபிஷேகம் செய்து நாங்கள் தொந்தரவு செய்வதுடன் அதன் இறகையே மூக்குத்தியாக அணிவித்து விரட்டி விடுவோம் !
செள் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டிலிருந்து அடைக் கோழிகளை எத்தனை முறை விரட்டியடித்தாலும் விக்ரமாதித்தன் கதையில் வருகின்ற வேதாளத்தைப் போன்று முயற்சியை கைவிடாது தொடர்ந்து அடைகிடக்கும் கோழி மீது வசம்பு கலந்த நீரை செள் நீங்கும் பொருட்டு ஊற்றுவோம் !
அடை கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமார் பதினொன்று முட்டைகளை வளர்பிறை நாளில் முட்டைகளின் அருகே கரித்துண்டு மற்றும் இரும்புத் துண்டு வைத்து எங்கள் அம்மாவின் வழிகாட்டுதலுடன் அடைகாக்க வைப்போம் !
நீண்ட இருபத்தி ஒன்று நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர் பொரித்து பூமியில் கால் பதிக்கின்ற சிவப்பு நிற அலகும் சிறிய இறகுகளும், இள மஞ்சள் நிறத்துடனும் கூடிய அழகிய கோழிக் குஞ்சுகளைக் காண அற்புதமாக இருக்கும் !
ஓடுகளின் கடினத்தன்மை காரணமாக பொரிக்காத முட்டைகளை சிறு கரண்டியால் மெதுவாகத் தட்டி பொரிக்க வைப்போம். ஓரிரண்டு கருவுறாத (கூ)முட்டைகள் பொரிப்பதில்லை. அரிசித் தவிட்டில் சற்று உப்பும் தண்ணீரும் கலந்து பிசைந்து தயாரிக்கப் படுகின்ற சத்துணவு மற்றும் பொடியரிசி கோழிகளுக்கு மிகவும் பிரியமானது !
எனது தம்பியின் கோழி, காகங்களை மட்டுமன்றி எங்களையும் அருகில் அண்ட விடாமல் பொறுப்புடன் குஞ்சுகளை கவனித்துக் கொள்ளும். வானத்தில் வட்டமடிக்கும் பருந்துகளுக்கும் காகங்களுக்கும் ஓரிரு குஞ்சுகள் இரையாவதுண்டு. பசி மிகுதியால் சில தருணங்களில் தாய்(அடை)க்கோழியே ஓரிரண்டு குஞ்சுகளை சாப்பிடுவதுமுண்டு !
என்னுடன் பயிலும் நண்பன் பத்மனாபனது அக்கா குடும்பம் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து எங்கள் தெருவில் குடியேறியது .பாண்டி, கிட்டு ,முத்து.என்ற மூன்று சிறுவர்கள் எங்களுக்கு பாண்டி நாட்டு வித்தைகள் பல கற்றுத் தந்தனர் !
அரிசி வத்தல் ,உள்ளி வத்தல், பெரண்டை வத்தல், வடகம் போன்றவற்றை தயாரித்து அவர்களது வீட்டு முற்றத்தில் வெயிலில் காய வைக்கும்போது இந்த சிறுவர்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பின் மேல் முறத்தை கவிழ்த்து வைத்து கம்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடியே வீட்டு முற்றத்தில் காவலிருப்பார்கள் !
காகம் வத்தலைத் தின்னத் துவங்கும் முன்னரே தருணம் நோக்கி பட்டென கயிற்றை இழுத்து அரசியல் வாதிகளுக்குக் கூட கைவராத காக்கா பிடிக்கும் யுத்தியை இள வயதிலேயே இச்சிறுவர்கள் இயல்பாகப் பெற்றிருந்தார்கள். ஊர் சிறுவர்களில் பலர் பல வழிகளில் பகீரதப் பிரயத்னம் செய்தும் சனி பகவானின் வாகனம் சிக்கியதில்லை !
எப்போதும் கலைடாஸ்கோப், லென்ஸ் வழியாக சினிமா பார்க்கும் கருவி, ரப்பர் கட்டிய கவிட்டைக் கம்பு ஆகியவற்றை கழுத்தில் தொங்க விட்டவாறே அலைகின்ற இவர்கள் பிற சிறுவர்களை விட முற்றிலும் வித்தியாசமானவர்கள் !
இச்சிறுவர்களுக்கு 'வித்தை மாற்று முறை'யில் நீச்சல் கற்றுக் கொடுத்து வித்தைகள் பலவற்றை எங்கள் தெரு சிறார்கள் கற்றனர். காலம் செல்லச் செல்ல எங்கள் கிராமத்துச் சூழலில் அவர்கள் மெல்ல இணையத் துவங்கினர். ஈஸ்வரன் வீட்டு மாமரத்தில் கல்லெறிவதற்குப் பதிலாக கவிட்டைக் கம்பை உபயோகித்து மாங்காயை குறி நோக்கி வீழ்த்துகின்ற நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்திய விஞ்ஞானிகள் இவர்கள் !
கல்லெறிந்து மாங்காய் பறித்த காரணத்தால் ஈஸ்வரனின் அப்பாவிடம் பல முறை பிடிபட்டு கோழிக் கூட்டுக்குள் இரு மணி நேரத்திற்கு மேலாக ஓய்வெடுத்த பின்னர் செள் கடி காரணமாக முட்டையிடாமலேயே வெளியேற்றப் பட்ட சசியும் ராஜுவும் நவீன மாங்காய் பறி தொழில் நுட்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் !
முகம் பார்க்கும் கண்ணாடியை சூரிய வெளிச்சத்தில் சாய்வாக நிறுத்தி வீட்டிற்குள் ஒளியைச் செலுத்தி சுவரில் படம் காட்டும் மதுரை சகோதரர்களின் வித்தைகள் குழந்தைகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கிளியாந்தட்டு, கபடி ,கள்ளன் போலீஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற சிறார்கள் அறிமுகம் இல்லாத வீட்டிற்குள் கூட அடாவடியாகப் புகுந்து ஒளிந்து கொள்வார்கள் !
கோடை விடுமுறையில் பத்மநாப புரத்திலிருந்து வந்திருந்த எனது தம்பி (சித்தப்பா மகன்) " கள்ளன் போலீஸ்" விளையாடும் போது தன்னைத் துரத்தி வருகின்ற சிறுவர்கள் நெருங்கிவிடவே தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி விட்டான் !
தரையில் ஓடுவதற்கு மட்டுமே விளையாட்டு விதிகளில் இடமுண்டு என்று கூறிய எங்களிடம் பிற மார்க்கங்களேதுமில்லாத நிலையில் ஒரு திருடனுக்கு தென்னை மரத்தில் ஏறித் தப்பிப்பிதற்கு எங்கள் ஊர் விளையாட்டு விதிகளில் இடமுண்டெனச் சாதித்தான் !
------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்
கூடுதல் ஆட்சியர்,
I.T.I.முகநூற் குழுமம்,
{28-11-2020}
---------------------------------------------------------------------