மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

செவ்வாய், 27 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (38) தம்பி வரதராஜனும், இராஜுவும் அரசுப் பணிக்குத் தேர்வு !


அம்மாவின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் இடக்கையால் அம்மா முதுகில் ஓங்கி அடித்து விட்டு "இறைவன் தரும் போது பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கின்ற பகவானிடம் நிபந்தனைகள் விதிப்பது முறையல்ல" எனக்கூறிக் கோபத்துடன் அவரது நண்பர் மாணிப்போற்றி வீட்டிற்குச் சென்று விட்டார் அப்பா.

 

இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையில் காண்கின்ற அப்பாவின் மனப்பாங்கு கண்டு நான் வியந்ததுண்டு. எளிதில் உணர்ச்சி வசப்படாத அப்பா , அம்மாவை அடிப்பது அதுவே முதல்முறை.

 

தட்டில் தேங்காய், பழத்துடன் மனதில் எதிர்பார்ப்புகளையும் சுமந்தவாறே பக்தர்களில் பலர் ஆலயத்திற்கு செல்வது இயல்பெனினும் , துன்பம் நேர்கையில் மனமுருகி பிரார்த்திக்கும் பலரும், இன்பத்தை துய்க்கையில் இறைவனை மறப்பதுடன், பிரார்த்தனை பலித்த பின்னர் காணாமல் போவதுமுண்டு.

 

கோரிக்கை நிறைவேறாமையால் வெறுப்புற்று இறைவனுக்காக தான் செய்த திருப்பணிகளைத் தியாகங்களாகவும் இறைவனை நன்றியற்றவராகவும் சித்தரித்து தம்மைக் கைவிட்டவரைக் காணச் செல்வதையே நிறுத்தியவர்கள் பலரையும் அனுபவத்தில் கண்டதுண்டு.

 

எந்நிலையிலும் மாறாத பக்தி செலுத்த வேண்டுமெனில் பகுத்தறிவு, தெளிந்த மனம், நல்லவர் சேர்க்கை ஆகியவற்றுடன் பூர்வஜென்ம புண்ணியமும் மிக அவசியம்.

 

'வறுமையில் வாடும் பக்தர் ஒருவர் குருவாயூரப்பனைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் வித்தியாசமான வேண்டுதலொன்றை முன் வைப்பது வழக்கம். இறைவன் தனக்கு அளிக்கின்ற செல்வத்தின் சரிபாதியை அவருக்கே சமர்ப்பிப்பதான வினோத வேண்டுதல் வைத்த பக்தருக்கு திடிரென கோடி ரூபாய் லாட்டரி அடித்தது.

 

இறைவனுடனான ஒப்பந்தப்படி பாதிப் பங்கை சமர்ப்பிக்க மனம் ஒவ்வாத பக்தர் " கள்ள குருவாயூரப்பா ! என் மீதான அவநம்பிக்கையால் தானே , பாதியை நீயெடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அளித்திருக்கிறாய் " என ஒரு போடு போட்டார். இத்தகைய மனநிலை கொண்ட பக்தர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.

 

நண்பன் முருகனுக்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் கம்மியராக (மெக்கானிக்) வேலை கிடைத்தாலும், வேலை முடித்து வந்தவுடன் குளித்து விட்டு என்னுடன் கோவிலுக்கு வரத் தவறுவதில்லை.

 

சுருக்கெழுத்து வகுப்புகள் முடிந்தவுடன் மாலை நேரம் திருப்பணிகளில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற என் தம்பியின் பள்ளித் தோழனான தம்பி இராஜு, அன்பின் நெருக்கத்தால் மதுசூதனப் பெருமாளை நெட்டையர் என்றும் மகாதேவரை கட்டையர் என்றும் குறிப்பிடுவதுண்டு. புன்னகை மாறாத முகத்துடன் அயராது திருப்பணி செய்யும் இராஜுவைக் கண்டு நான் வியந்ததுண்டு.

 

ஒரு 'பிரதோஷ நாள்' காலை ஏழு மணியளவில் பாதாதி கேசம் போர்த்தியவாறு சயனத்திலிருந்த அடியேனை , கையில் தினமலர் நாளிதழுடன் எழுப்பி , தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தால் 1986 ல் நடத்தப்பட்ட அமைச்சுப் பணியாளர்களுக்கானத் தேர்வில் நானும் அக்காவும் தேர்வாகியிருந்த நற்செய்தியைச் சொன்ன என் தம்பியின் முகம் இன்றும் என் நினைவில் உள்ளது.

 

சிறு விளக்கின் ஒளிக்கும் அந்தகாரத்தைப் போக்கும் வல்லமையுண்டென்ற இராம கிருஷ்ணரின் அருள்வாக்கைப் போன்றே அம்மாவின் நீண்ட நாள் கவலை இறைவனருளால் நொடிப்பொழுதில் முடிவுக்கு வந்தது. இறைவன் கருணையால் தம்பி வரதராஜனும், இராஜுவும் அடுத்த ஓராண்டுக்குள் அரசுப் பணிக்குத் தேர்வானது மட்டுமன்றி இன்று உயர் பதவிகளிலும் உள்ளனர்.

 

இறைவனது பெருமைகளை வர்ணிக்கும் புலமை எனக்கில்லாத காரணத்தால் , பெரிய புராணத்தை இயற்றத் துவங்கிய சேக்கிழார் பெருமானுக்கு எம்பெருமானே 'உலகெலாம் ' என அடியெடுத்துச் சிறப்பித்த முதற்பாடலுடன் பறக்கை -அக்கரை பெருஞ்சடை மகாதேவரை நன்றியுடன் தாழ்பணிந்து இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

 

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் .

நிலவுலாவிய நீர் மலி வேணியன்.

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்"

திருச்சிற்றம்பலம் !

-------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, கடகம் (டி) 01]

{17-07-2021}

--------------------------------------------------------------------------------

திங்கள், 26 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (37) பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் !


பறக்கை அக்கரை பெருஞ்சடை மகாதேவர் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகள் துவங்கத் தீர்மானித்ததைத் தொடர்ந்து 1984 ல் முதலாவது பிரதோஷ பூஜையை ஏற்கும் பேறு அப்பாவுக்கு வாய்த்தது.

 

---------------------------

பிரதோஷ வரலாறு:

----------------------------

மகாதேவரின் அனுமதியின்றி மந்திரகிரி மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது களைப்பின் மிகுதியால் வாசுகியால் வெளியிடப்பட்ட ஆலகால விஷத்தின் வீரியம் சமுத்திரத்தை பொங்கியெழ வைத்தது மட்டுமன்றி தேவர்களையும் துரத்த கலக்கமுற்ற தேவர்கள் கயிலைக்கு விரைந்து மகாதேவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

 

வானுலக தேவர்களே இடுக்கண் வருங்கால் இறைவனை நாடுபவர்களெனில் கலியுக மானுடர் எம்மாத்திரம் ?

 

தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைப் பருகிய சிவபெருமானின் கழுத்தை பார்வதி தேவி பிடிக்க , தேவர்களைத் துயரத்திலிருந்து மீட்ட நீலகண்டருக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், பிழை பொறுத்தருள வேண்டியும் பிரார்த்தித்த தேவர்களுக்கு நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே நர்த்தனமாடிய படியே மகாதேவர் தரிசனமளித்த சனிக்கிழமை மாலை நேரமே பிரதோஷம் (பிரபாதம் என்றால் காலை நேரம்) எனப் படுகிறது. பிரதோஷம் என்பதற்கு குற்றமற்ற என்ற பொருளும் உண்டு.

 

அதிமகத்துவம் வாய்ந்த பிரதோஷ பூஜைகளைத் தொடர்ந்து தொழுகின்ற பக்தர்களைத் துன்பங்கள் அணுகாததுடன், வாழ்வில் மலை போல் தோன்றுகின்ற தடைகள் யாவும் பனிபோல் மறைந்து போகும்.

 

எதிர்பார்த்தது போலவே அக்கரைக் கோவில் பிரதோஷ பூஜைகளில் பெண்களின் பங்களிப்பு திருப்தி கரமாக அமைந்தது. மகாதேவருக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை ஆறரை மணியளவில் பிரதோஷ பூஜைகளுக்குப் பின் பக்தர்களுக்கு தீர்த்தமும் திருநீறும் வழங்கிய பிறகு அடுத்த பிரதோஷ பூஜைக்கான தேதியை உரக்க அறிவித்து உபயதாரருக்கு பிரசாதத்தை வழங்கத் தயாரானார் மாணிப் போற்றி.

 

பிரதோஷ பூஜைகள் மக்களிடையே பிரபலமாகாத காலகட்டமாதலால், உபயதாரர் இல்லாத நிலையில் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு வீட்டையடைந்தார் அப்பா.

 

முந்தைய இரவு தடம் எண் 36 எ. பள்ளம் பேருந்தினுள் கொசுக்கடியுடன் தூங்கி எழுந்து பகலில் படிக்கட்டில் நின்ற படியே பணியாற்றும் நடத்துனரான ஐம்பத்தேழு வயது அப்பா அன்று இரவு சுமார் எட்டு மணியளவில் களைப்பாக சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது' அடுத்த பிரதோஷமும் நமக்குத் தான் ' என அம்மாவிடம் பேச்சினிடையே மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அக்கா தற்காலிகப் பணியிலிருக்கும் நிலையில் , படிப்பை முடித்து ஐந்தாண்டுகள் கடந்த பின்பும் அரசுப் பணியேதும் எனக்கு அமையாத கவலையில் , சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்க அமரும் சந்தர்ப்பங்களில் அப்பாவிடம் புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அம்மா.

 

1985- ல் கல்லூரிப் படிப்பை முடித்த தம்பி நாகர்கோவிலில் சுருக்கெழுத்துப் பயிற்சி எடுத்து வந்த நேரம். நவம்பர்.1987 ல் பணி ஓய்வு பெறும் நிலையிலுள்ள அப்பாவுக்கு குறைவான பணிக்காலமே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்த காரணத்தால் ஓய்வூதியம் கிடையாது.

 

அரசுப் பணியேதும் எனக்கு கிடைக்காத பட்சத்தில் , சமூகத்தில் மதிக்கப்படுகின்ற அப்பா , ஓய்வுக்குப் பின் ஏதாவது திருமண மண்டபத்தில் காக்கிச் சட்டையுடன் காவலராகப் பணியாற்ற வேண்டிய கதியேற்படுமோவென்ற கவலை எங்களை ஆட்கொண்டது.

 

சிக்கலான பொருளாதார நிலையில் இரண்டாவது பிரதோஷத்தையும் ஏற்று வந்த அப்பாவிடம் "பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் என வேண்டிக் கொள்வது தானே" என அம்மா கூறினார்.

 

மாம்பழக்காரரிடம் பேசும் பாணியில் மகாதேவரிடமும் பேரம் பேசும் மனநிலை கொண்ட சாதாரண குடும்பத் தலைவிகளின் பிரதிநிதியான அம்மா அங்ஙனம் கூறியதில் வியப்பேதுமில்லை. இறைவனுக்கு தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்ட அப்பாவுக்கு, நிபந்தனைகளுடனான சுயநலம் சார்ந்த பக்தியின் வெளிப்பாடான அம்மாவின் வார்த்தைகள் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை (ஆனி) 26]

{10-07-2021}

-----------------------------------------------------------------------------           

 

அந்நாளை நினைக்கையிலே (36) எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் !

  

மாலை வேளைகளில் குளித்து விட்டு நண்பன் முருகனுடன் மதுசூதனப் பெருமாள் தரிசனம் முடித்து அக்கரை பெருஞ்சடை மகாதேவரையும் தரிசித்த பின் ஜவஹர் நூலகம் செல்வது வழக்கம்.

 

அதன் பின்னர் மேலத்தெரு கணேஷ் வீட்டின் பக்கவாட்டில் அமைந்துள்ள தாணு அண்ணனின் மாஸ் காபி நிறுவனத்திற்குச் சென்று நண்பர்களுடன் அளவளாவிய பின்னர் இரவு எட்டு மணியளவில் வீடு திரும்புவது வழக்கம்.

 

கிழக்கு திசை நோக்கிய சிறு கற்கோவிலின் எதிர்ப்புறம் பச்சைக் கம்பளம் போர்த்திய அழகிய வயல் வெளிகள், நண்டுகளுடன் மீன்களும் ஆமைகளும் விளையாடும் நீர் நிறைந்த வாய்க்கால்கள்.

 

அதன் பின்னே இராவணனுடான போரில் மயங்கி வீழ்ந்த இலக்குவனையும் வானரர்களையும் காப்பாற்றும் பொருட்டு ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பட்ட மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையின் உடைந்த பகுதியாக கருதப்படும் மருந்துவாழ் மலை, மனதையும் உடலையும் இதமாகத் தடவிச் செல்லும் தென்றல் காற்று என இன்றளவும் பழைமை மாறா ஆலயத்தினுள் ஏகனாகவும் அனேகனாகவும் அருள் பாலிக்கின்ற அக்கரை மகாதேவரது திருவடிகளைப் பற்றுகின்ற பேறு பெற்றவர்கள் புண்ணியவான்களே.

 

கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றுடன் தொழிற்பழகுனர் பயிற்சியும் முடித்தபின் வேலைக்காக முயன்று கொண்டிருந்த முருகனுடன் , 1981ல் பட்டப்படிப்பை முடித்த பின் கஜினி முகமதுவின் சாதனைகளைக் கடந்து போட்டித்தேர்வுகளில் பங்கெடுத்து வந்த நானும் இணைந்தேன்.

 

தெப்பக் குளத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது எனது வீடு. தலை நிறைய எண்ணெய் தேய்த்துச் செல்பவர்கள், மண்வெட்டியுடன் செல்பவர்கள், ஒற்றைப் பிராமணர், கணவனை இழந்தோர் போன்றோர் தேர்வெழுதக் கிளம்பும் வேளை எதிரில் தோன்றுவதைத் தவிர்க்கவியலாது.

 

சகுனப் பிழை காரணமாக உத்தேசித்த காரியம் கைகூடாதென்ற பிற்போக்கான எண்ணம் மேலிட இத்தகையோர் எதிரில் தோன்றும் போது ஒதுங்கி நின்றேன்.

 

குறிப்பாக பெண்கள் மனம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடுமென்ற பகுத்தறிவும் , சகுனங்களை விட சக்தி வாய்ந்த இறையருளும், உழைப்பும் இது போன்றோரின் உளப்பூர்வமான பிரார்த்தனையும் கரை சேர்க்குமென்ற எண்ணம் மேலிட்ட போது சகுனம் பார்க்கும் வழக்கம் நாளாவட்டத்தில் என்னால் கைவிடப்பட்டது.

 

அக்கால கட்டத்தில் அக்கரை மகாதேவரை இடைவிடாது தரிசித்த இளைஞர்கள் பலர் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புகளைப் பெற்று நற்கதியடைந்த நிலையில், மகாதேவரது திருவடிகளை சரணடைந்தால் வாழ்வில் கரையேறி விடலாமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் பெற்றோரால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இளைஞர்களுடன் மெய்யன்பர்களும் பகவானை மொய்த்தனர்.

 

எதிர்பார்ப்புகளேதுமின்றி இளைஞர்களும் பெரியவர்களும் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுடன் சிவத் தொண்டில் ஈடுபட்டிருந்த நிலையில், பெற்றோரின் உந்துதலால் இணைந்த இளைஞர்களில் பலரும் இறை காருண்யத்தால் மெய்யன்பர்களானதை பூர்வ ஜென்ம புண்ணியம் என்று தானே கூறவியலும் ?

 

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் பலரும் தீய பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு நல்ல பழக்கங்களுக்கு தம்மையறியாமலேயே தாவி விட்டதை எனது அனுபவத்தில் கண்டு வியந்திருக்கிறேன்.

 

சுற்றுப்பிரகார தீப ஒளியிலும் மூலஸ்தானத்திலுள்ள திருவிளக்குகளின் பிரகாசத்திலும் ஜொலிக்கின்ற பரம்பொருளை - இமைப் பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்கானைக் கைகூப்பி மெய் மறந்து 'ஓம் நமசிவாய ' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உதடுகள் உச்சரிக்கும் வேளை சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்டது போன்று பக்தவத்சலனின் காருண்யத்தால் ஒளி பரவி இருள் விலகுவதை மனதால் உணர முடியும்.

 

இறை வழிபாட்டின் போது நம்மையறியாமலேயே மின்னலெனத் தோன்றி மறைகின்ற புதிரான எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் , இறை தரிசனம் முடித்து திரும்பும் வேளை சிவன் தாழ் சமர்ப்பித்த தைரியத்தில் மாயமாகி விடுவதை உணர்ந்ததுண்டு.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அக்கரை மகாதேவர் ஆலயத்தில் மகளிர் வருகை மிகக் குறைவானதாகவே இருந்தது. இறைவனின் அருள் வீச்சு எண்ணற்ற பக்தர்களைச் சென்றடைய வேண்டுமென்ற நல்லெண்ணம் காரணமாக புகழ்பெற்ற சிவனடியார் ஒருவரை பத்மனாபன் சார், மாணிப் போற்றி, எனது அப்பா, ராசா அண்ணாச்சி, மாதேவன் பிள்ளை மாமா, கங்கை மாமா மற்றும் பக்தர்களடங்கிய குழுவொன்று ஆலயத்திற்கு அழைத்து வந்தது.

 

இறை முன் ருத்ரம் பாடியமர்ந்த சிவனடியார் நீண்ட பிரார்த்தனைக்குப் பின்னர் பிரதோஷ பூஜைகளின் சிறப்புகளை விவரித்து விட்டு இறைவனது அருள் பெரும்பாலான பக்தர்களைச் சென்றடைய பிரதோஷ பூஜைகள் வழிவகுக்குமென அருளியதை சிரமேற்கொண்டு பக்தர்கள் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை  (ஆனி) 19]

{03-07-2021}

----------------------------------------------------------------------------------