மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மார்ச், 2022

அந்நாளை நினைக்கையிலே (48) வித்வான் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் !

 

1971 காலகட்டத்தில் பறக்கை கீழத் தெருவில் மேற்கு நோக்கியமைந்த திருவாவடுதுறை மடத்திற்கு புதிய சாமியார் வந்திருப்பதாக அறிந்ததும், மடத்தின் வாசலில் கூடிய கூட்டத்தில் ஆர்வத்துடன் நின்றிருந்த சிறுவர்களாகிய எங்களை ஆறடி உயரம்,காதில் தங்கக் குண்டலங்கள், தலையிலும் மார்பிலும் ருத்ராட்ச மாலையுடன் சிகப்பு நிறமும் வசீகரத் தோற்றமும் கொண்ட காவி உடை தரித்த வித்வான் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் கனிவுடன் வரவேற்றார் !

 

மணி அண்ணன் தனது குழுவினருடன் மாலைகட்ட உபயோகித்து வந்த காவி வண்ண கல்மண்டபமாக மட்டுமே காட்சியளித்த 'சாமியார் மடம் ' என்று அழைக்கப் படுகின்ற தலம்,  தம்பிரான் வருகையால் புதுப்பொலிவு பெற்றது !


சிறந்த கல்விமானும் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் குறித்த அறிவும் தெளிவும் தமிழில் ஆளுமை வாய்ந்த கல்வியாளர்களுடனும் புலவர்களுடனும் விவாதிக்கும் திறனும் ஒருங்கே கொண்ட இலக்கிய வாதியான தம்பிரானைத் தேடி உள்ளூர் - வெளியூர் கல்வியாளர்களுடன் ஆன்மீக வாதிகளும் பறக்கைக்கு தினம் வந்த வண்ணமிருந்தனர் !

 

அதிகாலை துயிலெழுந்து குளித்து தியானம் செய்யும் தம்பிரான் ஒரு யோகிக்கான உடற்கட்டுடையவர். சனி, ஞாயிறு தினங்களிலும் இதர விடுமுறை நாட்களிலும் காலை பத்து முதல் பதினொன்றரை மணி வரை தேவாரம், திருவாசகப் பாடல்களை கம்பீரமான தனது குரலில் இசையுடன் பாடி எங்களையும் பாட வைத்ததோடு பொருள் கற்பித்து இரட்டை வரி புத்தகத்தில் பிழையின்றி தமிழை எழுதவும் வைத்தார் தம்பிரான் !

 

அளவான அர்த்தமுள்ள பேச்சு, ஒழுக்கத்துடன் நேரம் தவறாமையையும் போதித்த அவர் "தோடுடைய செவியன் விடையேறியோர் " என திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடலை பண்ணிசைத்துப் பாடுவதைக் கேட்பதற்காகவே இசை ஆர்வலர்களின் சங்கமொன்று மடத்தின் திண்ணையில் செவி சாய்த்திருக்கும் !

 

மடத்தின் உள்ளே தெற்கு நோக்கிய நடராஜப் பெருமானுக்கு மணி அண்ணன் அபிஷேகம் முடித்த பின் , கூப்பிய கைகளுடன் தேவாரம் பாடுவது தம்பிரானின் வழக்கம் !


தீபாராதனை முடிவுற்ற பின் வழங்கப்படும் நெய்யுடன் கதலிப்பழம் சீனி கலந்த திருமதுரத்தினை ருசித்த பின், மடத்திலுள்ள பாதாம் மரத்திலிருந்து விழுகின்ற பழுத்த பழங்களின் தசையுடன் கூடிய கனியைச் சுவைத்து கடினமான பகுதியைக் கல்லால் உடைத்து மண் புரண்ட பாதாம் பருப்பை ஊதித் தின்பது எங்கள் வழக்கம் !

 

குழந்தைகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கியதுடன், செய்யும் சேட்டைகளை ரசிக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர் தம்பிரான். மடத்தைச் சுற்றியுள்ள நிலத்தில் பாத்தி கட்டி வகை வகையான அழகிய பூச்செடிகளை நட்டு நீரூற்றி ஊழியர்களின் துணையோடு எழில் மிகு பூங்காவனமாகவே மாற்றி விட்டார் தம்பிரான் !

 

பூங்காவனப் பிரவேசனத்திற்காகவே ஆன்மீக வகுப்பில் இணைந்த நண்பர்களுண்டு. பிச்சிப்பூக்களுடன் வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கும் அரளி, சாமந்தி, வாடாமல்லி, செத்தி, அந்தி மந்தாரையுடன் வாழைப் பூக்களிலுள்ள தேனையும் நுகர வரும் கண்கவர் வண்ணங்களிலான பட்டாம்பூச்சிகளும், ரீங்காரமிடும் வண்டுகளும், தேனீக்களும், குளவிகளும் கண்ணுக்கு விருந்தாயின. மடத்தின் வளர்ப்புத் தேனீக்களுக்கு மது நுகர மடத்தை விட்டகல வேண்டிய அவசியமில்லை !

 

ஓங்கி உயர்ந்த இலவ மரக்கிளைகளில் கொஞ்சிக் குலாவும் பச்சைக் கிளிகள், புறாக்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள், விருந்தினராக வந்து செல்லும் வாலாட்டிக் குருவிகள், தெப்பக் குளத்து மீன்களை மரக்கிளைகளிலமர்ந்து சாவதானமாகப் புசிக்கின்ற மீன் கொத்திப் பறவைகள், கானமிசைக்கும் குயில்கள், மரங்கொத்தி, செண்பகம், பாதாம் மரக் கிளைகளிலமர்ந்து, தரையில் மண் வீடுகட்டி பசி மறந்து விளையாடும் சிறுவர்கள் தலையில் எச்சமிட்டு மீண்டுமொரு முறை குளிக்கத் தூண்டும் பொறுப்பற்ற காகங்கள் என நீங்கா நினைவுகள் நெஞ்சிலுண்டு !

 

சுறுசுறுப்பாக எப்போதும் காணப்படும் தம்பிரான் மாலை நேரங்களில் ஊரிலுள்ள ஆன்மீகப் பிரியர்களுடன் அக்கரை பெருஞ்சடை மகாதேவரை தரிசிக்கச் செல்வார். செய்யும் பணியில் ஈடுபாடின்றிச் சோம்பிக் கிடந்த ஊழியர் சிலருக்கு தம்பிரானின் வருகை பணிச்சுமையை ஏற்படுத்தியது !

 

அதிகாலையில் எழுந்து மடத்தையும் சுற்றுப் புறத்தையும் சுத்தப்படுத்தி இலைச் சருகுகளை அனுதினம் எரிக்க வேண்டியிருந்ததுடன், காலையும் மாலையும் பூச்செடிகளை நீரூற்றி பராமரிக்கின்ற கூடுதல் பணியும் அழகுணர்ச்சி மிகுந்த (?) மடப்பணியாளர்களுக்கு அயர்ச்சியூட்டியது !

 

கோபத்தை வெளிக்காட்டவியலாது மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த அவர்கள் தருணம் நோக்கி காத்திருந்தனர். 'கதை கட்ட ஒருவன் துணிந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு' என்ற கவியரசரின் வரிகளுக்கேற்ப "மடச்சாமியார் இருக்காரா?" எனத் தம்பிரானின் காதுபடக் கிண்டல் செய்கின்ற - மடத்திலுள்ள தென்னைகளிலிருந்து இளநீர் திருடும் 'குடிமகன்கள்' சிலர் மடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரது இசைவோடு தங்கள் சுதந்திரத்திற்கு தடையாகவிருக்கும் தம்பிரானைக் குறித்து திருவாவடுதுறை மடத்தின் தலைமைக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் புனைந்து புகாராக அனுப்பினர் !

 

தம்பிரானுக்கு முன்பிருந்த கண்டிப்பான சாமியாரும் இதே முறையில் மாற்றப்பட்டவரே. தன்னைக் குறித்து புகார் அனுப்பப் பட்டதைக் கேள்வியுற்ற தம்பிரான் பறக்கை மடத்தில் தொடர விருப்பமின்றி சொந்த விருப்பத்தின் பேரில் மாறுதலில் சென்ற போது அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆன்மீக வாதிகள், பாசமிக்க குழந்தைகள் மட்டுமன்றி ஊர் மக்களும் மனம் கலங்கி நின்றனர் !

 

திருவாவடுதுறை ஆதீனமாக பிற்காலத்தில் தம்பிரான் தேர்ந்தெடுக்கப்பட்ட விழாவில் அவரது அழைப்பின் பேரில் சென்றவர்களில் எனது மாமாவும் ஒருவர். தம்பிரானது மாறுதலுக்குப் பிறகு சாமியார்கள் ஓரிருவர் பறக்கை மடத்திற்கு மாறுதலில் வந்து சென்றாலும், தம்பிரானைப் போன்று அறிவும் ஆற்றலும் இளந் தலைமுறையினருக்கு ஆன்மீகத்தோடு அறிவையும் போதிக்கும் உயர்ந்த எண்ணமும் ஒருங்கே கொண்ட சாமியார்கள் பறக்கைக்கு கிடைக்கவில்லை !

 

"மாதர் பிறைக் கண்ணி யானை " எனத் துவங்கி "கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்"என எங்கும் நிறைந்த எம்பெருமான் அய்யாறப்பரை நினைந்துருகும் மனதை உருக்குகின்ற அப்பர் பெருமானின் தேவாரம் எதிரொலித்து சைவ நெறி வளர்த்த புராதனமான திருவாவடுதுறை மடம், ஒரே ஒரு ஊழியருடன் வெறும் கல் மண்டபமாகக் களையிழந்து ஆண்டுகள் முப்பதுக்கும் மேலாகிறது ! 


அவ்வழியாக கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மாயாத நினைவுகள் மனதில் தோன்றி மறைவதைத் தவிர்க்கவியலவில்லை !

  ------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{05-02-2022}

-------------------------------------------------------------------------------------------------------

 


செவ்வாய், 1 மார்ச், 2022

அந்நாளை நினைக்கையிலே (47) சுங்குவார் சத்திரம் சுதாகர் !

 

சபரிமலை தரிசனம் முடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்திற்காக பம்பையில் காத்திருக்கும் பெருங்கூட்டம் புழுதியை கிளப்பிக் கொண்டு வந்து நின்ற புனலூர் செல்லும் இரு சிவப்பு நிற கேரள மாநிலப் போக்குவரத்து கழகப் பேருந்துகளைக் கண்டவுடன் ஓட்டுனரது பிரத்யேக வாசல் வழியாகவும் இதர வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே நுழைய அலைமோதியது !

 

உடைமைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மலையாளத்திலும் மலையாளம் கலந்த தமிழிலுமான போக்குவரத்துக் கழக ஒலிபெருக்கி எச்சரிக்கையையும் மீறி முண்டியடித்த கூட்டத்தில் பக்தர்கள் வேசத்தில் ஏறிய திருடர்களும் அடங்கும் !

 

1989 ல் முதல் முறையாக சித்தப்பாவுடன் சபரிமலை அய்யப்பனைத் தரிசித்த நான் ஓரிரு மாதங்களுக்கு முன்பு அரியலூரிலிருந்து மாறுதலில் திருச்செந்தூரில் பணியேற்றிருந்தேன். பம்பையில் ஒவ்வொரு நிமிடமும் கூடிக் கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு அடுத்த பேருந்து ப்போதென்றறியா நிலையில் பேருந்தின் பின்பக்கம் படிக்கட்டின் மேல் கால் வைக்க கிடைத்த இம்மியிடத்தை ஒரு வழியாகத் தக்க வைத்துக் கொண்டேன் !

 

கரகாட்டக்காரன் திரைப்பட காயலாங்கடை வண்டியாகக் காட்சியளிப்பினும், மலைச் சரிவுகளில் சீரான வேகத்தில் இயக்குவதில் அனுபவம் வாய்ந்த முன்னாள் இராணுவத்தினரது சிறந்த சேவையும் சிறப்பான இயந்திரப் பராமரிப்புமே கேரள யானை வண்டிகளை பயணிகள் விரும்பக் காரணம் !

 

கதவுகள் அடைக்கப்பட்ட பின் அளவிற்கு மேலான பயணிகளுடன் இடப்பக்கம் சாய்ந்த நிலையில் புறப்பட்ட பேருந்தில் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொண்ட பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய பயணிகள் தரையிலும் படிக்கட்டிலுமாக அமர்ந்து சக பயணிகளிடம் தரிசன அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கையில் சோகமே உருவாக தனித்திருந்த சுதாகர் என்ற இளைஞரின் பால் எனது கவனம் சென்றது !

 

சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் சொந்தமாக பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் சுதாகர் நண்பர்களுடன் தனியார் பேருந்தில் தரிசனத்திற்கு வந்த போது சன்னிதானத்தில் வைத்து வழி தவறி தனியாக மாட்டிக் கொள்ள நேர்ந்தது !

 

பேருந்தை தவற விட்ட அவர் குழுவின் திட்டப்படி குற்றாலத்தில் இணைந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களுடன் பயணித்தார். சரண கோஷம் முழங்கி வந்த அய்யப்ப பக்தர்கள் தங்களைத் தழுவிய குளிர் காற்றில் மெல்ல மெல்ல அசதியில் மயங்கினர் !

 

இடுப்பில் உடுத்திய நீல வேட்டி, கழுத்தில் துளசி மணி மாலை, துண்டு, புனலூருக்கு பயணச்சீட்டு எடுத்தது போக கால்சட்டைப் பையில் மீதமிருந்த இருபத்திரண்டு ரூபாய், கையில் இருமுடிக் கட்டு ஆகியவற்றுடன் பயணித்த சுதாகருக்கு, குற்றாலத்தில் நண்பர்களை சந்திக்கவியலாத சூழல் ஏற்படும் பட்சத்தில் ஊர் சென்று சேர மேலும் முப்பது ரூபாய் அதிகமாக தேவைப்படுமென பேச்சினூடே தெரிவித்தாரெனினும் எங்கள் எவரிடமும் நேரடியாக பணம் கோரவில்லை !

 

சிகப்பு நிறம், களையான முகம், தேவையைத் தெளிவாகத் தெரிவிப்பதில் கூச்சம் போன்ற குணாதிசயங்கள் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவரென சுதாகரை அடையாளம் காட்டியது. மனமறிய தவறேதும் செய்யவில்லையெனினும், மண்டல விரதத்தின் போது தான் அறியாமல் செய்த பிழைகளேதும் தனக்கு இந்நிலை ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கக்கூடுமெனவும் தொடரந்து புலம்பிக் கொண்டு வந்தார் சுதாகர் !

 

மாலை நேரம் புனலூர் நிறுத்தத்தை பேருந்து அடைந்த செய்தியை நடத்துநர் உரக்கத் தெரிவித்ததுடன் தூக்கத்திலிருந்து விழித்த பக்தர்கள் கூட்டம் தென்காசி பேருந்தை நோக்கி விரைந்தது. பேருந்தை விட்டு இறங்கிய நான், திருடர்களுக்கு அஞ்சி கால்சட்டை பைக்குள் பதுக்கி வைத்திருந்த ஐம்பது ரூபாயுடன் சுதாகரைத் தேடினேன் !

 

எனக்காகக் காத்திருக்காமல் சென்ற சுதாகரை ஒரு வழியாக தேடிப்பிடித்து அவரது கையில் காசைக் கொடுத்தவுடன், எனது முகவரியை நிர்ப்பந்தமாகக் கோரிய சுதாகருக்கு திருச்செந்தூர் அலுவலக முகவரியைக் கொடுத்தேன் !

 

மறு தினம் அலுவலகம் சென்ற நான் மஞ்சள் காமாலை பீடிக்கப்பட்டு, மருத்துவ விடுப்பில் தொடர்ந்ததால் சுதாகரால் அனுப்பப் பட்ட ஐம்பது ரூபாய் பண விடையையும் கடிதத்தையும் தாமதமாகவே பெறமுடிந்தது !

 

பதிலேதும் என்னிடமிருந்து பெறப்படாத காரணத்தால் முத்தான கவிதை வடிவிலான கையெழுத்தில் - எனது உதவியை பேருதவியாக சித்தரித்திருந்த சுதாகரின் இரு கடிதங்களையும் மருத்துவ விடுப்பு முடிந்து பணியேற்ற நான் படித்ததுடன், பதிலெழுதுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தையும் விவரித்து எழுதினேன் !

 

சுதாகர் எழுதிய உணர்ச்சி பூர்வமான கடிதங்களை அடிக்கடிப் படித்து ஆனந்திக்கும் அளவிலான முதிர்ச்சியையே அன்று நான் பெற்றிருந்தேன். கையறு நிலையிலுள்ள சக மனிதனுக்கு எந்தவொரு சாதாரண மனிதனும் செய்யக்கூடிய உதவியே நான் செய்ததென்ற பகுத்தறிவு மேலிட, கடிதங்களை அசைபோடும் சிறுபிள்ளைத் தனத்தைக் கைவிட்டாலும், ஒவ்வொரு மண்டல காலமும் சுதாகரின் நினைவுகள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !

 -------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{29-01-2022}

--------------------------------------------------------------------------

திங்கள், 28 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (46) அய்யர் கடை வேலுப்பிள்ளை மாமா !

 

காடேற்றி, கக்கன்புதூர், புல்லுவிளை ஆகிய பக்கத்து கிராமங்களிலிருந்து இயற்கை உரத்தில் உற்பத்தியான தரமான பேயன்பழம், ஏத்தன், மட்டி, செந்துழுவன், கதலி மற்றும் பாளையங்கோட்டை என வகைவகையான வாழைக் குலைகள் (தார்கள்) அய்யர் கடையில் எப்போதும் கிடைக்கும் !

 

வாழைப் பழங்களுக்கு சற்று அதிக விலை கோரும் அய்யரிடம் 'உங்கள் பழங்களுக்கு மட்டும் அப்படி என்ன கிராக்கி ' என வினவுவோருண்டு !

 

வாழையிலேயே நின்று விளைந்து பழுத்த 'தன்பழம்' என்பதாலேயே அதிக விலையெனத் தன்னிலை விளக்கமளிக்கும் அய்யரிடம்,  மாலை நேரம் கடைமுன் நின்று பேச்சிற்கிடையே கையால் சைகை காட்டி "சாமி ! உம்மகிட்ட தன்பழம் கெடக்கா" என நையாண்டி செய்யும் சசியை "சவத்துக்குப் பொறந்த பய" என நாக்கைத் துருத்தி விரட்டுகின்ற அய்யரிடம் பத்தே நிமிடங்களில் ஒன்றும் நடவாதது போல் மீண்டும் வந்து நின்று கதை விடும் அளவு 'மிக்கி- மவுஸ்' உறவு அவர்களுடையது !

 

அடாது விரட்டினாலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் பழத் தோலுக்காக கடை முன் தவம் கிடக்கும் பசுக்களுடன், மிட்டாய் குப்பிகளை கண்ணால் மேய்ந்த பின் ஒரு காசுக்கு கல்கோனா வாங்கிச் செல்ல தீர்மானிக்கும் சிறுவர்களை கடையருகே அண்டவிடாது துரத்தும் சுடலைக்கு நேர்ந்த வளைந்த கொம்புகளுடைய சண்டியர் ஆடுகளையும் கடைமுன் காணலாம்!

 

தனது மகன் இராஜுவை பட்டப்பெயரால் கோபத்தில் திட்டுகின்ற அய்யருக்கு, மகனின் நண்பர்கள் அங்ஙனம் அழைப்பது ஒவ்வாதென்பதைத் தெரிந்தே "கருப்பட்டி இருக்கானா" எனக் குசலம் விசாரித்து அய்யரை துர்வாசராக்குவது தெற்குத் தெரு நீலகண்ட அய்யர் மகன் நண்பன் வரதராஜனுக்கு பிடித்தமான பொழுதுபோக்குபட்டப்பெயரில் நண்பர்களால் அழைக்கப் படுவதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நண்பன் ராஜுவுக்கு எப்போதும் உண்டு. !

 

"ரெண்டு அனாவசியம் குடுங்க சாமி" எனக்கோரும் அப்பாவிப் பெண்களிடம் நாக்கைத் துருத்தி கையால் தலையிலடித்த பின் ஔஷதப் பெட்டியிலிருந்து அனாசின் எடுத்துக் கொடுக்கும் அய்யர், ஆஸ்ப்ரோ, பாரசிட்டமால், என்ரோகுயினால், குளோரோஸ்டெப், ஆன்டி டெட்ராசைக்லின், அல்பென்டசோல் அமிர்தாஞ்சன், அஞ்சால் அலுப்பு மருந்து, ஓமத்திராவகம் , காயத்திருமேனி ஆகியவற்றை தேவையறிந்து வழங்கும் அவசர கால மருத்துவர் !

 

தான் வழங்கும் மருந்துகள் அவசர உதவிக்கானவையெனவும், மருத்துவரை அணுகுமாறும் பலத்த நோய் அறிகுறிகள் உள்ளோரிடம் எச்சரிப்பது அவரது வழக்கம் !

 

எவரிடமும் வம்புக்குப் போகாத நல்ல மனிதரான கடை அய்யர், இளைய மகன் இராஜுவிடம் அளவற்ற அன்பு கொண்டவரென்பதை மிகவும் பெருமையாக அவனைக் குறித்து எங்களிடம் பேசுவதிலிருந்து அறிந்து கொள்ளவியலும். இருப்பினும் அன்றைய காலத் தந்தைகளைப் போல மகனிடம் பாசத்தை வெளிக்காட்டாத மனிதரவர் !

 

புரட்டாசி சனிக்கிழமைகளில் சங்கரும் பக்கத்து வீட்டு கோபிநாதன் மாமா இளைய மகன் ராஜேஷும், தொழில் முனைவோர் ஆகிவிடுவது வழக்கம். அய்யர் கடையில் பத்து ரூபாய்க்கு சூடம் வாங்கி அதை இருபது சிறு பொதிகளாக்கி கோட்டாறிலிருந்து வாங்கி வைத்திருக்கும் நறுமணத் திரவியத்தை திருக்கிணற்றுத் தண்ணீருடன் பாத்திரத்தில் கலந்து சிறு குப்பிகளில் ஊற்றி பன்னீராக உருமாற்றி தங்கள் நண்பர்களையே ஒரு ரூபாய் சம்பளத்தில் தற்காலிகப் பணியமர்த்தி ஒவ்வொரு தெருமுனையிலும் விற்க வைத்து விடுவார்கள் !

 

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுடன் சிறிது தூரம் பேசிய படியே நடந்து பொருட்களை வாங்க வைத்து விடுவது இவர்களுக்கு கைவந்த கலை.தேங்காய், பழம் வெற்றிலை, பாக்கு வாங்க விழையும் பக்தர்களை அய்யர் கடைமுன் நிறுத்தி அய்யர் கருணைக்கு ஆளாகி விடுகின்ற இச்சிறுவர்கள், துளசி மாலைகளின் மேல் தண்ணீர் தெளித்து கோவில் முன் வாடாமாலை விற்கின்ற மணி அண்ணனிடம் ரொக்கமாக காசைக் கொடுத்து பத்து மாலைகளை பதினேழு ரூபாய்க்கு கொள்முதல் செய்து மாலையொன்றுக்கு இரண்டு ரூபாய் வைத்து விற்று விடுவதுண்டு !

 

"நீங்க நெனச்ச காரியம் நடக்கும்மா. பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிட்டு போங்க" எனப் பெண்களை உணர்வுபூர்வமாக அணுகி கிடைக்கின்ற இலாபத்தை பாழாக்காமல் தங்கள் அம்மாவிடம் கொடுக்கின்ற இவர்கள் அடுத்த பண்டிகை வியாபாரத்திற்கான பணப்பதுக்கலுக்கு மட்டுமே பாடப்புத்தகங்களை பயன்படுத்துவது வழக்கம் !

 

கடை அய்யரின் இரு மக்களும் அரசு வேலைகளில் இணைந்த பின் வயது மூப்பு காரணமாக வியாபாரத்தை சரிவர நடத்தவியலாததால் அவரது வலங்கையான வேலுப்பிள்ளை மாமா பறக்கை சந்திப்பிலுள்ள ஜெ.பி.ஸ்டோர்ஸில் பணியில் இணைந்தார் !

 

கையில் காசு கிடைத்தவுடன் கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய் வாங்க அந்நாளில் அய்யர் கடைக்கு விரைந்தவர்களும் , தீபாவளித் திருநாளன்று இருப்பிலுள்ள பட்டாசுகளை காலி செய்த பின் அவசரத் தேவைகளுக்காக பொட்டு வெடி, கேப் வெடி, எறப்படக்கு, ஓலப்படக்கு வாங்கி வெடித்து அக்கம் பக்கத்திலுள்ள பெரியவர்களின் நிம்மதியைக் கெடுத்த அந்நாள் சிறுவர்களும் அய்யர் கடையை ஒரு போதும் மறக்கவியலாது !

 

 -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{22-01-2022}

------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (45) மேலத்தெரு அய்யர் கடை !


எனது சிறு பருவத்தில் மேலத்தெருவில் அய்யர் கடையும் (நண்பன் ராஜுவின் அப்பா ) கண்ண ஜனார்த்தனன் அண்ணன் கடையும் ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வந்த பலசரக்கு கடைகள். பறக்கை சந்திப்பில் நண்பர் சக்திவேலின் அப்பா (பாண்டிகாரர்) கடையும் மாமூட்டிலுள்ள ஒரு கடையுமாக இரு பலசரக்கு கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன !

 

ஜெ.பி.ஸ்டோர் என்ற ஜெய்னுலாப்தீன்- பகவதியப்பன் ஸ்டோர் (தற்போதைய தீபா ஸ்டோர் )சில ஆண்டுகளுக்குப் பின்னரே துவங்கப்பட்டது. வணிகர் தெருவில் மூக்கண்ணன் கடையும் (கிருஷ்ண மூர்த்தி ஸ்டோர்) துர்க்கை அம்மன் கோவிலருகே மற்றொரு பலசரக்கு கடையும் இயங்கி வந்தன !.

 

அய்யர் கடையில் (திரு. முத்து கிருஷ்ணன்) காலை நேரத்தில் ஐந்து காசுக்கு காபி வில்லையும் பத்து காசுக்கு கருப்புக் கட்டி வாங்குவதற்கு ஒரு கூட்டம் காத்து நிற்கும். காடேற்றி, கக்கன்சேரிக் காரர்களுக்கு தெற்குத் தெருவில் கடைகளேதும் இல்லாததால் பொருட்கள் வாங்க அய்யர் கடைக்கு வந்தாக வேண்டிய நிலை !

 

வெத்திலை பாக்கு, சொக்கலால் பீடி, அஞ்சு பூ பீடி, கோபால் பல் பொடி வாங்க நிற்கும் நடுத்தர வயதினரையும் , நன்கு பரிச்சயமானவர்கள் அகன்ற பின் சிசர்ஸ், சார்மினார், பெர்க்லி சிகரெட்டுகள் வாங்க காத்து நிற்கும் இளைஞர்களையும் காலைநேரம் காணமுடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமய சந்தர்ப்பமறிந்து பூர்த்தி செய்வதில் கடை அய்யர் கைதேர்ந்தவர் !

 

அன்றைய முக்கிய குளிர்பானங்களான காளி மார்க் சோடாவுக்கும் களச்சி சோடாவுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம். பால் பைகள் பலசரக்கு கடைகளுக்கு வராத காலமது. கடைகளின் வாசலில் தோரணங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்ற நவீன கால மல்லிப்பொடி,  மிளகு பொடி, சாம்பார் பொடி, ஆட்டா , மசாலாப் பொடியடங்கிய நெகிழிப் பைகள் அப்போது இல்லை !

 

ஜீரகம், கடுகு, வெந்தயம், பூண்டு, வத்தல் மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் பத்து என அன்றாடத் தேவைகளுக்கு சில்லறையாக வாங்கி வந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அபயமாக இருந்தது அய்யர் கடை மட்டுமே. கொள்முதல் செய்த பொருட்களுக்கான கணக்கை சிகரெட் கவரைக் கிழித்து காதில் சொருகி வைத்திருக்கும் பென்சிலால் வேகமாக குறித்துக் கொடுப்பது அய்யரின் வழக்கம் !

 

முந்நூறு மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட பித்தளை லோட்டா நிறைய கருப்புக் கட்டி காபியோ கொத்தமல்லி காப்பியோ குடித்த பின்னரே காலைக்கடன் கழிக்கச் செல்வோர் அன்று ஏராளம். இரசாயனக் கூடப் பரிசோதனையைப் போன்று காபி வெள்ளை வர்ணம் பெற்றவுடனே பால் ஊற்றுவதை நிறுத்திப் பரிமாறி விடும் அம்மா ஒரு அங்கீகரிக்கப்படாத விஞ்ஞானி!

 

ரொக்கமாக பணத்தைக் கொடுத்து வாங்குவோரை விட கடனுக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களே நிறைந்திருந்த காரணத்தால் பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் கடன்காரர்களை விரட்டி வசூல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கடை அய்யருக்கு உண்டு. கடனைத் திருப்பிக் கொடுக்காத பலரும் புதிய கடைகளில் வாடிக்கையாளர்களாக மாறி அய்யர் கண்ணில் படாமல் பாதை மாறி சஞ்சரிப்பது வழக்கம் !

 

கண்ணிமைக்கும் நேரத்தில் காகிதத்தில் கூடு செய்து பொருட்களை அளந்து வைத்து தொங்கிக் கொண்டிருக்கும் சணல் கண்டிலிருந்து துச்சாதனன் போல் சணலுருவி வேகமாக பொதிந்து கொடுப்பது அங்கு பணியாற்றி வந்த வேலுப்பிள்ளை மாமாவுக்கே கைவந்த கலை !

 

அய்யர் இல்லாத சந்தர்ப்பங்களில் அய்யரின் மூத்த மகனான சர்மா அண்ணன் கடையைக் கவனித்துக் கொள்வாரெனினும், பிறபணிகளின் பொருட்டு அண்ணன் வெளியே செல்லும் வேளைகளில் தனது தம்பி ராஜுவிடம் கடையை ஒப்படைத்துச் செல்வது வழக்கம் !

 

தன்னுடைய நண்பர்கள்- அதிலும் குறிப்பாக முக்கண்ணன் போற்றி மகன் சசியோ கணேசனோ விளையாட அழைக்கும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுக்கே முன்னுரிமை கொடுத்து கடையை விட்டு ஓடி விடுகின்ற ராஜுவை கோபம் தலைக்கேற நாக்கைத் துருத்தி "கருப்பட்டி" என திட்டிக் கொண்டு பொருட்களை வீசியெறியும் தந்தையைக் கண்டு கொள்ளாமல் செல்வது ராஜுவின் இயல்பு !

 

அப்பாவிற்கும் மகனுக்குமிடையே ராஜுவின் அம்மா படும் பாடு சொல்லி மாளாது. அய்யருக்கு கோபம் தலைக்கேறும் சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி வாங்கிய பொருட்களுக்கு காசு கொடுக்காமல் கழன்று விடும் பேர்வழிகள் அதிகம். வீட்டில் வாங்கச் சொல்லும் பொருட்களை சற்று அளவு குறைத்து வாங்கி மிஞ்சுகின்ற ஒரணவாவை  கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய்களாகவும் பொரிகடலையாகவும் உருமாற்றம் செய்யும் சிறுவர் கூட்டம் ஒன்றும் அப்போது உண்டு !

 

பத்து காசுக்கு வாங்கிய வெற்றிலை பாக்கை கடைமுன் ஓரமாக வைக்கப்பட்ட குழவிக்கல்லில் பதமாக இடித்து வாயில் ஒதுக்கி வைத்த பின் போதை நிறைந்த வியாட்பாணம் புகையிலையையும் வாயின் ஓரமாகத் திணித்துக் கடைமுன் நின்று கொண்டு தங்கள் பொக்கை வாய் நண்பர்களிடம் அட்டகாசமாகப் பேசிச் சிரித்து அக்கம்பக்கத்தில் நிற்பவர்களை சிவப்பு மனிதர்களாக்கி விடுகின்ற தாத்தாக்களின் அட்டகாசம் என அய்யர் கடையில் கலகலப்புக்குக் குறைவில்லை !

 ------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{15-01-2022}

------------------------------------------------------------------------